பேரணாம்பட்டு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூர்:
பேரணாம்பட்டு அருகே உள்ள ஒரு கிராம பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதி சமூகநல ஆர்வலர் அன்னபூரணி, சைல்டுலைன் உறுப்பினர் மணிசேகர் மற்றும் மேல்பட்டி போலீசார் துத்திப்பட்டு பகுதியில் விசாரித்தனர்.
அப்போது பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுமிக்கு அவருடைய பெற்றோர் எம்.பி.குப்பத்தை சேர்ந்த உறவினர் மகனுக்கு வருகிற 26-ந் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் 26-ந் தேதி அந்த சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தினர். 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டனர்.
இதுகுறித்து மணமகனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.