செய்திகள்
சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன்

சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு- கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-01-11 04:54 GMT   |   Update On 2020-01-11 04:54 GMT
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி, பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேர்தல் முடிவை எதிர்த்து தேவி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பிரியதர்ஷினி தலைவராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேவியின் மனு மீது நீதிபதிகள் புகழேந்தி, சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. தலைவர் பதவி ஏற்புக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால் துணைத் தலைவர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 6 கவுன்சிலர்கள் கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஜெயகாந்தன், சங்கராபுரம் ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News