செய்திகள்

வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

Published On 2019-06-17 11:09 IST   |   Update On 2019-06-17 11:09:00 IST
வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

வாலாஜா:

வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவ மழை பொய்த்து விட்டதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததுள்ளது. ஏரி, குளங்கள், கிணறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள், குடிதண்ணீருக்கு வெகுதூரம் அலைய வேண்டிய நிலையும், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் காத்திருந்தும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் போராட்டம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

வாலாஜா அடுத்த ராணிப்பேட்டை நெல்லிக்குப்பம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை- பொன்னை செல்லும் சாலையில் இன்று திரண்டு மறியல் செய்தனர். சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. எனவே நாங்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவநிலை ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினர்.

சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News