செய்திகள்

திருக்கனூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-05-31 17:03 GMT   |   Update On 2019-05-31 17:03 GMT
திருக்கனூர் அருகே உறவினரின் திருமண நிகழ்சிக்கு விலை உயர்ந்த ஜவுளி எடுத்து தராததால் என்ஜினீயரிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தன். ரைஸ்மில் தொழிலாளி. இவரது மகள் சரண்யா (வயது19). இவர் வில்லியனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து 2-ம் ஆண்டுக்கு செல்ல தயாராக இருந்தார்.

இந்த நிலையில் கோவிந்தனின் உறவினர் திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் திருமணத்துக்கு ஜவுளி வாங்கி சரண்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுவையில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது சரண்யாவுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி கொடுத்தனர். ஆனால் தனக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி தரவேண்டும் என்று சரண்யா அடம்பிடித்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் சமாதானம் அடையாமல் சரண்யா வழியிலேயே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வீட்டுக்கு வந்த சரண்யா விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். வீட்டின் மாடி அறைக்கு சென்ற அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். வெகு நேரமாக மாடியில் இருந்து சரண்யா வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சரண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரண்யாவை தூக்கில் இருந்து மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சரண்யாவின் தாய் மனோன்மணியம் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News