செய்திகள்
தர்மபுரி தொகுதி தி.மு.க. எம்.பி.க்கு காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு
பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தர்மபுரி தொகுதி தி.மு.க. எம்.பி.க்கு காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காரிமங்கலம்:
தர்மபுரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், போட்டியிட்டு வெற்றிபெற்ற டாக்டர். செந்தில்குமார் சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்.
இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த தி.மு.க. எம்.பி. டாக்டர். செந்தில்குமாருக்கு மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாணவேடிக்கை, தாரை தப்பட்டை முழங்க நூற்றுக் கணக்கானோர் இதில் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க.வினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எம்.பி. செந்தில்குமார் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாதவரம் மாவட்ட கழக செயலாளர், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தனக்கோடி, முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பி.சி.ஆர். மனோகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ், முன்னாள் அவைத் தலைவர் சிவாஜி, முன்னாள் துணைச் சேர்மன் யுவராஜ், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பெரியண்ணன் என சுமார் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.