செய்திகள்

கோட்டயம் அருகே போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை - பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-05-22 05:08 GMT   |   Update On 2019-05-22 05:08 GMT
கோட்டயம் அருகே போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மன்னர்காடு பகுதியை சேர்ந்தவர் நவாஸ் (33). காய்கறி வியாபாரி.

கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் நவாஸ் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் தகராறு செய்தார். இது குறித்து மன்னர்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவாசை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள அறையில் அடைத்தனர்.

நேற்று மதியம் நவாஸை கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர். இந்த நிலையில் அவர் சிறுநீர் கழித்து விட்டு வருவதாக போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரை போலீசார் தேடி சென்றனர். அப்போது நவாஸ் போலீஸ் நிலைய கழிவறையில் வேட்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நவாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் நவாஸ் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திரண்டு வந்து மன்னர்காடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.

இந்த தகவல் மாநில டி.ஜி.பி. லோகநாத் ஜெகதாவுக்கு கிடைத்தது. அவர் நவாஸ் மரணம் குறித்து விசாரணை நடத்தவும், அப்போது பணியில் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட நவாஸ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Tags:    

Similar News