செய்திகள்

நெய்வேலி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2019-05-20 05:33 GMT   |   Update On 2019-05-20 05:33 GMT
நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் என்.ஜீ.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை(வயது 34). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மணிமேகலை அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மணிமேகலை நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் நேற்று இரவு மணிமேகலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மணிமேகலை மயங்கி விழுந்தார்.

உடனே அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இருந்த டாக்டர்கள் மணிமேகலையை பரிசோதனை செய்தபோது அவர் வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிமேகலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மணிமேகலை வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாரா? அல்லது பணி சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மேகலையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News