செய்திகள்

திருச்சியில் பெண் என்ஜினீயரை தவிக்க விட்டு சென்ற கணவர்

Published On 2019-04-30 12:03 GMT   |   Update On 2019-04-30 12:03 GMT
திருச்சியில் கோவிலுக்கு செல்வதாக அழைத்து வந்து பெண் என்ஜினீயரை தவிக்க விட்டு கார் மற்றும் குழந்தையுடன் மாயமான கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:

திருச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 32), சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ராஜேஷ் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் மனைவியிடம் சம்பளத்தை கேட்டு தொல்லை செய்த தோடு, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் ராஜேஷ், தனது மனைவி சிவரஞ்சனியிடம் திருச்சி சென்று கோவில்களில் வழிபாடு செய்து வரலாம் என கூறியுள்ளார். அதனை நம்பிய சிவரஞ்சனியும் தனது குழந்தை, கம்பெனி லேப்-டாப், ரூ.50 ஆயிரம் பணத்துடன் பெங்களூரில் இருந்து கணவருடன் திருச்சிக்கு புறப்பட்டார்.

திருச்சி வந்ததும் ராஜேஷ் சிவரஞ்சனியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மேலும் ராஜேஷ் செல்லும் போது, சிவரஞ்சனியின் கார் மற்றும் லேப்-டாப், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றுடன் குழந்தையையும் தூக்கி சென்று விட்டார். இதனால் ராஜேஷ் தன்னை ஏமாற்றியது தெரிய வரவே, சிவரஞ்சனி இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், குழந்தையுடன் எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையுடன் மாயமான ராஜேசை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News