செய்திகள்

ஈரோடு அருகே சொத்து தகராறில் தந்தை அடித்துகொலை - மகன் வெறிச்செயல்

Published On 2019-04-16 07:44 GMT   |   Update On 2019-04-16 07:44 GMT
ஈரோடு அருகே சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு:

ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

ராமசாமி மகன்நாராயண மூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இதற்கிடையே சொத்து தொடர்பாக தந்தை-மகன் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு இது தொடர்பாக மீண்டும் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்க மணிக்கு எழுதிவைப்பதாக கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயண மூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை சராமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 10.45 மணிக்கு ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.

அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயண மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News