செய்திகள்

ராகுல் பிரதமரானால் விலைவாசி குறையும்- ஜோதிமணியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம்

Published On 2019-04-10 11:56 GMT   |   Update On 2019-04-10 11:56 GMT
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நிச்சயமாக விலைவாசி குறையும் என்று கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம் செய்தார். #Loksabhaelections2019 #SenthilBalaji
கரூர்:

கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி கரூர் பெரியார்நகர், ஆண்டாங்ககோவில் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் பெட்ரோல், டீசல் விலை 2 மடங்காக உயரும். மோடியும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து கொண்டு கொடுங்கோல் ஆட்சியாக நாட்டை மாற்றி விடுவார்கள். ஆனால் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் விலையினை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவந்து கட்டுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தந்துள்ளார். நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விலைவாசி குறையும்.

இந்த தொகுதியில் 2 முறை தொடர்ச்சியாக எம்.பி.யாக இருக்கும் மு.தம்பித்துரை தொகுதி மக்களின் பிரச்சனைக்காக ஒருபோதும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. நரேந்திர மோடியின் ஆட்சி மோசம் என விமர்சித்த மு.தம்பித்துரை மீண்டும் அவருக்கு வாக்குகேட்கிறார். இதனை சிந்தித்து பாருங்கள். இந்த தேர்தல் முடிந்தால் அடுத்த தேர்தலுக்குதான் உங்களை சந்திக்க வருவார். ஆகவே பாராளுமன்றத்தில் நமது குரலாக ஒலிக்க ஜோதி மணிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

பிரசாரத்தின் போது மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட காங். தலைவர் சின்னசாமி, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் பலர் உடனிருந்தனர். #Loksabhaelections2019 #SenthilBalaji
Tags:    

Similar News