போரூர்:
போரூர் ஏரியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் அரிவாள் வெட்டு விழுந்து இருந்தது.
இதனை பார்த்துஅதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். லுங்கியும் சட்டையும் அணிந்து இருந்தார்.
கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. உடல் கிடந்த இடம் அருகே மது பாட்டில்கள் கிடந்தன.
எனவே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் முன்விரோதத்தில் யாரேனும் அவரை கடத்தி கொலை செய்துவிட்டு உடலை இங்கு வீசினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.