செய்திகள்

மார்த்தாண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- கடைக்காரர் கைது

Published On 2019-03-29 13:52 GMT   |   Update On 2019-03-29 13:52 GMT
மார்த்தாண்டம் அருகே அகதிகள் முகாமில் மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:

மார்த்தாண்டத்தை அடுத்த கோழிவிளை பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. முகாமில் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.

இந்த முகாமில் உள்ள ஒரு 3 1/2 வயது குழந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மிட்டாய் வாங்கச் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த குழந்தை வீடு திரும்பிய போது அழுது கொண்டே வந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையிடம் விசாரித்த போது கடையில் இருந்தவர் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக கூறியது. இதையடுத்து கடைக் காரரிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர் எந்தவித பதிலும் கூறவில்லை.

இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கடையில் இருந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அகதிகள் முகாமை சேர்ந்த நவநீதன் (வயது 44) என்பவர் கடை நடத்தி வருவதும், அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News