செய்திகள்
முன்னாள் அமைச்சர் செல்வராஜ்

மரணமடைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

Published On 2019-03-27 04:50 GMT   |   Update On 2019-03-27 04:50 GMT
திருச்சியில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது. #FormerMinisterSelvaraj
திருச்சி:

தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் (வயது 75). என்ஜினீயரான இவர் 1980-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை திருச்சி தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்தார். இவர் 1987-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.

ம.தி.மு.க. தொடங்கப்பட்டபோது, அந்த கட்சிக்கு சென்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்களில் செல்வராஜூம் ஒருவர். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்த இவர் 2006-ம் ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் செல்வராஜூக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கடந்த ஓர் ஆண்டு காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் திருச்சி வந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், செல்வராஜ் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நலம் விசாரித்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். அவரது உடல் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செல்வராஜின் உடலுக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

செல்வராஜின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 3 மணி அளவில் திருச்சி தில்லைநகர் முதல் குறுக்கு சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. செல்வராஜூக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.  #FormerMinisterSelvaraj



Tags:    

Similar News