செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கணவன்-மனைவி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

Published On 2019-03-20 16:13 GMT   |   Update On 2019-03-20 16:13 GMT
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருடைய மனைவி அருணா (25). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் கனிஷ்கா (1 1/2). சரவணன் மெனசியில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்தார். 

இந்த நிலையில் கனிஷ்காவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினர். நேற்று ஏ.பள்ளிப்பட்டியில் சரவணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். 

இதற்காக ஏ.பள்ளிப்பட்டிக்கு சரவணனின் உறவினர்கள் சென்று விட்டனர். நேற்று மாலை அவர்கள் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது உறவினர் ஒருவர் சரவணன் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. சரவணன், அருணா, கனிஷ்கா ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர். உடனே அவர்களை மீட்டு அங்கிருந்து பாப்பிரெட்டிப்பபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனும், அருணாவும் பரிதாபமாக இறந்தனர். 

கவலைக்கிடமான நிலையில் இருந்த குழந்தை கனிஷ்காவை அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

அதுமட்டும் இல்லாமல் சரவணன் சிலரிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் விஷம் குடித்து இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News