பல்லாவரம் அருகே என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், வினாயகா நகர், 4-வது தெருவில் வசித்து வருபவர் அலெக்ஸ். என்ஜினீயர். மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது 5 வயது மகள் மதிவானிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அலெக்சும், அவரது மனைவியும் ஆஸ்பத்திரியில் இருந்து மகளை கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு உடல் நலம் தேறிய மகளை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
பீரோவில் இருந்த 70 பவுன் நகை, வெள்ளிப் பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகை-பொருட்களை சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.