செய்திகள்

அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்- அமைச்சர் பேட்டி

Published On 2019-02-20 10:23 GMT   |   Update On 2019-02-20 10:23 GMT
அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் சிறப்புநிதி வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #ministerkamaraj #SpecialAssistance

திருவாரூர்:

தமிழ்மொழி காவலர் உ.வே.சாமிநாதய்யர் 165வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சாமிநாதய்யர் இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலைக்கு அமைச்சர் இரா.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டக் கலெக்டர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு தொழிலாளர்கள் அனைவருக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. முதல்வர் அறிவித்திருந்த இந்த சிறப்புநிதியினை பெற அனைத்துவகை தொழிலாளர்களும் தகுதியுடையவர்கள். நானும் மற்றசில அமைச்சர்களும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, தொழிலாளர்கள் தங்களுக்கு சிறப்புநிதி கிடைக்குமா? என்று கேட்டு வருகின்றனர். அவர்களின் கருத்தை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

அப்போது சிறப்புநிதி வழங்குவதில் தொழிலாளர்கள் யாரும் விடுபட மாட்டார்கள். தகுதியுடைய அனைத்துவகை தொழிலாளர்களுக்கும் இந்த சிறப்புநிதி வழங்கப்படும். இந்த பயனாளிகள் பட்டியலில் தகுதியுடைய தொழிலாளர்களின் பெயர் விடுபட்டிருந்தாலும் யாரும் கவலைப்பட வேண்டாம். தொழிலாளர்கள் யாரேனும் விடுபட்டு இருந்தால் அவர்களிடம் மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை அடிப்படையில் அவர்களுக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.  #ministerkamaraj #SpecialAssistance 

Tags:    

Similar News