செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் கடற்கரையில் ஒதுங்கிய 48 கிலோ கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டதா?

Published On 2019-02-13 04:50 GMT   |   Update On 2019-02-13 04:50 GMT
வேதாரண்யம் பகுதியில் கடற்கரையில் ஒதுங்கிய 48 கிலோ கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள், மற்றும் கஞ்சா ஆகியவை கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் 24 நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தாலும், இன்று வரை இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்துவது நடைபெற்று தான் வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை கடற்கரையில் இன்று 13 மூட்டைகள் கரை ஒதுங்கி இருந்தன.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவ கிராம மக்கள், இதுபற்றி கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கடற்கரையில் ஒதுங்கிய மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. 13 மூட்டைகளிலும் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 26 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோல் பெரிய குத்தகை கடற்கரையிலும் இன்று தலா 2 கிலோ வீதம் 22 கிலோ கஞ்சா 11 மூட்டைகள் இருந்தன. இதையும் கடலோர காவல் படையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இதன் மதிப்பு சர்வசேத சந்தையில் ரூ.2 லட்சம் ஆகும்.

வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற போது மர்ம கும்பல் இதை விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் கிடந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News