செய்திகள்

மம்தா பானர்ஜி செயல் கண்டிக்கத்தக்கது - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-02-04 10:03 GMT   |   Update On 2019-02-04 10:03 GMT
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் செயல் கண்டிக்கத்தக்கது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MamtaBanerjee
ஆலந்தூர்:

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் ஊழல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சி.பி.ஐ. முயற்சியை முதல்-மந்திரி மம்தாபானர்ஜி நேரடியாக தடுத்து நிறுத்தி இருக்கிறார். இது இந்திய ஜனநாயகத்தின் மீது சம்மட்டியால் அடித்தது போல் இருக்கிறது.

மம்தாபானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். 1972-ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு இன்னலுக்கு ஆளானார்கள். பல கஷ்டங்கள் பட்டோம் என்று அவர்களே கூறியுள்ளனர். இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசோடு சேர்ந்து தி.மு.க. கருத்து சொல்லி வருகிறது.

பிரதமர் மோடி மாநிலங்களுக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக பல மாநில அரசுகள் செயல்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் செயல் கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் விவசாயிகள் நலன், தொழிலாளர்கள் நலன், ஓய்வூதிய திட்டம், வரிவிலக்கு, ஊரக வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்ற ஒரு பட்ஜெட். இதை யாரும் குறை சொல்ல முடியாது.

காங்கிரசில் வறுமை ஒழிப்பு திட்டம் என்று சொல்லி வருகிறார்கள். வறுமை ஒழிப்பு என்பது அவர்களுக்குத்தான். அவர்களுடைய வறுமையை ஒழிக்கத்தான் பல ஊழல்கள் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #MamtaBanerjee

Tags:    

Similar News