செய்திகள்
பாரிமுனையில் துணிப்பைகள் விற்பனை மும்முரம்.

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை- துணிப்பை, காகிதப்பைகள் விலை 2 மடங்கு உயர்வு

Published On 2019-01-05 07:54 GMT   |   Update On 2019-01-05 07:54 GMT
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் காகிதப்பைகள், துணிப் பைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு துணிப்பை விலை கூடுதலாகி உள்ளது. #PlasticBan
சென்னை:

தமிழகம் முழுவதும் ஜனவரி-1 ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் தட்டுகள் உள்பட14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

இதனால் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி, விற்பனை முழுவதும் குறைந்தது.

மளிகை கடைகள், காய்கறி கடைகள், உணவகம் உள்ளிட்ட பல கடைகளில் துணிப்பைகள், காகிதப் பைகளில் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் துணிப்பை காகிதப் பைகளுக்கு மவுசு அதிகரித்தது.

காதிதப்பைகளுக்கான தேவை அதிகரிப்பால் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட காகிதப்பைகள் 2 மடங்கு அதிகரிப்பட்டு ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.

சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 விலையில் காகிதப்பைகளும் ரூ.15 விலையில் துணிப்பைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னையில் துணிப்பைகள், காகிதப் பைகள் விற்பனை செய்யும் கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. துணிப்பைகள், ரூ.20 முதல் ரூ.100 வரையிலான விலையில் பல்வேறு விதமான வகைகளில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல காகிதப்பைகளும் பல்வேறு வடிவங்களில் தயார் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

இது குறித்து பாரிமுனையில் காகிதப்பை, துணிப்பைகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஜனவரி-1 ந்தேதி முதல் துணிப்பைகள், காகிதப்பைகளுக்கு ‘மவுசு’ ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் மத்தியில் துணிப்பை, காகிதப்பைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் கடைகளுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. காகித, துணிப்பைகள் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.

துணிப்பை, காகிதப் பைகளுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள வரவேற்பால் பல்வேறு வகையான வடிவங்களில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறோம். ரூ.20 முதல், ரூ.100 வரையிலான விலையில் துணிப்பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல காகிதப்பைகள் ரூ. 5 முதல் ரூ.30 வரையிலான விலையில் பல்வேறு மாடல்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

காகிதப்பைகள், துணிப் பைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு துணிப்பை விலை கூடுதலாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
Tags:    

Similar News