செய்திகள்

வாணியம்பாடி பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

Published On 2019-01-02 06:11 GMT   |   Update On 2019-01-02 06:11 GMT
வாணியம்பாடி அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததால் 15 கிராம மக்கள் விடிய விடிய தூங்காமல் பீதியில் தவித்தனர்.

வாணியம்பாடி:

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் ஊராட்சி நாகலேரிவட்டம் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி சிறுத்தை ஒன்று கரும்பு தோட்டத்தில் பதுங்கியது. அப்பகுதியை கடந்த பெண் உள்பட 3 பேர் மீது அது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இத்தகவல் பரவியதை அடுத்து, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை மீது அப்பகுதியை சேர்ந்த திரளானோர் ஒன்றிணைந்து கல்வீச்சு நடத்தினர். அப்போது கூட்டத்தினர் மீது சிறுத்தை பாய்ந்து தாக்குதல் நடத்தியதில், மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மாட்டு இறைச்சி, கோழி ஆகியவற்றை அடைத்த 3 கூண்டுகளை சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்தனர். மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். 3 நாள்கள் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்த போதும் அது சிக்கவில்லை.

ஆந்திர வனப்பகுதிக்குள் சிறுத்தை தப்பி சென்று விட்டது. இனி இந்த பகுதிக்குள் சிறுத்தை வராது என்று வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்

இந்நிலையில், சிக்கனாங்குப்பம் அருகே உள்ள அரப்பாண்டகுப்பம் கிராமத்தினுள் நேற்று அதிகாலை மீண்டும் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள மாட்டுக் கொட்டகை அருகே சிறுத்தை வந்ததைக் கண்ட மாடுகள் கத்தியது. இதனை கேட்ட கிராமத்தினர் தீப்பந்தங்களுடன் ஓடி வந்து சிறுத்தையை விரட்டினர்.

அதைத் தொடர்ந்து, சிறுத்தை ராஜாமணிவட்டம் கிராமத்தில் புகுந்தது. அங்கு கொட்டையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகள், கன்று குட்டியை தாக்கியது.

கன்றுக்குட்டி, மாடுகள் கத்தியதைக் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சிறுத்தையை விரட்டினர். காயமடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயமடைந்த 2 மாடுகள் பரிதாபமாக இறந்தது. சிறுத்தை கடித்து இதுவரை 5 மாடுகள் இறந்துள்ளது.

விடிய, விடிய தவித்த கிராம மக்கள்

வாணியம்பாடியை சுற்றி தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வருவதற்கு அச்சமடைந்துள்ளனர்.

சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியை சுற்றி உள்ள கொத்தூர், பச்சூர், சிக்கனாங்குப்பம், சங்கரபுரம், தும்பேரி, அரப்பாண்ட குப்பம், சிமுக்கம்பட்டு உள்ளிட்ட 15 கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்து விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இளைஞர்கள் கிராம வீதியில் தீப்பந்தம் கொளுத்தி வைத்திருந்தனர்.

இன்று காலை திருப்பத்தூர் வன அலுவலர் சோழராஜன் தலைமையில் வனத்துறையினர் சிக்கனாம்குப்பம், அரபாண்டகுப்பம், ராஜாமணி வட்டம், சிமுக்கம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேட்டறிந்தனர். பலியான மாட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

சிறுத்தையின் கால் தடங்களை பதிவு செய்து வருகின்றனர். சிறுத்தை எந்த திசையை நோக்கி சென்றுள்ளது என்பது குறித்த ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் தானியங்கி கதவு வேலை செய்யாததால் மாட்டு இறைச்சியை சிறுத்தை தின்று விட்டு தப்பி சென்று விட்டது.அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வனத்துறையினர் மைக் மூலம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

கிராம மக்கள் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட வீட்டை விட்டு வெளியே வரமல் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தமிழக- ஆந்திர வனத்துறை இணைந்து பிடிக்க வலியுறுத்தல்

கிராம மக்கள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபிலை சந்தித்து சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். இந்த கிராமங்கள் அனைத்தும் ஆந்திர மாநில எல்லையில் இருப்பதால் சிறுத்தையை இங்கிருந்து விரட்டினால் ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

நம் மாநில வனத்துறையினர் சிறுத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விட்டது இனி வராது என்கின்றனர். ஆனால் சில நாட்களில் சிறுத்தை மீண்டும் தமிழக கிராம பகுதிக்குள் புகுந்து எங்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

இதனால் தமிழக- ஆந்திர வனத்துறையினர் கூட்டாக இணைந்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். * * * சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராம பகுதியில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்த காட்சி.

Tags:    

Similar News