செய்திகள்

தங்கையை கணவர் கடத்திச் சென்றதால் 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்

Published On 2018-12-29 11:05 GMT   |   Update On 2018-12-29 11:05 GMT
தங்கையை கணவர் கடத்திச் சென்றதால் வேதனையடைந்த மனைவி 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றார்.

பழனி:

பழனி அருகே உள்ள கோதைமங்களத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளார். அவரது மனைவி தங்கவில்லம்மாள் (30). இவர்களுக்கு ஜெயராஜ் (5), அயன் சேவுககுமார் (4) ஆகிய மகன்கள் உள்ளனர்.

தங்கவில்லம்மாளின் தங்கை சத்யா (25). இவருக்கு ராமமூர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி தனியாக வசித்து வந்தார். சத்யாவுக்கும் இளைராஜாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இது குறித்து தங்க வில்லம்மாள் தனது கணவரை கண்டித்தார். அதற்கு இளையராஜா தகாத உறவு வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று கோர்ட்டிலேயே சொல்லப்பட்டு விட்டது என கூறி வந்துள்ளார்.

சம்பவத்தன்று இளையராஜா யாருக்கும் தெரியாமல் சத்யாவை கடத்திச் சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த தங்கவில்லம்மாள் தனது 2 குழந்தைகளுக்கும் சாணிபவுடரை கொடுத்து தானும் அதனை குடித்தார். 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தனது மனைவி வேறு நபருடன் சென்றதால் சத்யாவின் கணவர் ராமமூர்த்தியும் வி‌ஷம் குடித்து பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். வி‌ஷம் குடித்த 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 4 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News