செய்திகள்

சுனாமி நினைவு தினம் - கடலூரில் மீனவர்கள் அஞ்சலி

Published On 2018-12-26 09:27 GMT   |   Update On 2018-12-26 09:27 GMT
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூணில் பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். #Tsunami #MemorialDay
கடலூர்:

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.

இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை யோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில், புதுகுப்பம் எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி பேரலை தாக்கியது.

கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்துசென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 610 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 7 ஆயிரம் கட்டு மரங்கள், பைபர் படகுகள், விசைப்படகுகள், 4 ஆயிரம் மீன்பிடி வலைகள், 650 ஹெக்டேர் நிலங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்தது.

சுனாமி பேரலை தாக்கி 14-வது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்தது.

தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கடற்கரைக்கு கண்களில் கண்ணீரையும், நெஞ்சத்தில் சோகத்தையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் மவுன ஊர்வலமாக பூக்கூடைகளையும், பால் குடங்களையும் ஏந்தியபடி கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் கண்ணீர் மல்க கடலில் பாலை ஊற்றி, கூடைகளில் கொண்டுவந்த பூக்களை கடலில் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது இறந்தவர்களை நினைத்து பெண்கள் கதறித்துடித்தனர். இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் உள்ளது. அங்கு பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் அந்தப் பகுதி மீனவர்கள் சுனாமி நினைவு தினம் அனுசரித்தனர். இதையொட்டி தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கூனிமேடு, கூனிமேடுகுப்பம், அனுமந்தைகுப்பம், எக்கியார்குப்பம், கீழ்புத்துபட்டு குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுனாமி தாக்கியபோது ஏராளமானோர் பலியானார்கள்.

இதையொட்டி இன்று மரக்காணம் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீனவர்கள் கடல் பகுதிக்கு சென்று பால் ஊற்றினர். பின்பு கடலில் மலர் தூவி கண்ணீர்அஞ்சலி செலுத்தினர். சுனாமியில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

சுனாமியின்போது காரைக்கால் பகுதியில் உள்ள பட்டனம்சேரி, கீழ் தான்குடி உள்பட 11 கிராமங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியானார்கள். அவர்களின் நினைவாக கடற்கரையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

சுனாமி தினத்தை யொட்டி கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் கலெக்டர் கேசவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்பு சுனாமியின்போது இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நன்டலாறு, பட்டினச் சேரி ஆகிய பகுதிகளில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது பல பெண்கள் கதறி அழுதனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது. #Tsunami #MemorialDay

Tags:    

Similar News