செய்திகள்
கடலில் மூழ்கி பலியான 3 மாணவிகளை படத்தில் காணலாம்.

பூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி

Published On 2018-12-19 08:36 GMT   |   Update On 2018-12-19 08:36 GMT
பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Poompuharbeach
சீர்காழி:

மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ., படிப்பவர்கள் மஞ்சு, விவேகா, முதலாம் ஆண்டு படித்துவந்தவர் சிவப்பிரியா. இவர்கள் 3 பேரும் தனது தோழிகள் உட்பட 7 பேர் இன்று காலை பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

அப்போது காவிரி கடலோடு சங்கமிக்கும் இடத்தில் குளிக்க முடிவு செய்தனர். அப்போது சிவபிரியா, மஞ்சு, விவேகா ஆகிய 3 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். இதில் சேற்றில் சிக்கி 3 மாணவிகளும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதை கண்ட மற்ற மாணவிகள் செய்வதறியாமல் அச்சத்தில் அலறினர்.



இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சேற்றில் சிக்கிய 3 மாணவிகள் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூம்புகார் போலீசார் 3 மாணவிகள் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் சேறுடன் கூடிய புதைமணல் அதிகம் இருப்பதால் அங்கு பொதுமக்கள் இறங்கி குளிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை போலீசார் அங்கு வைத்திருந்தனர். ஆனால் கல்லூரி மாணவிகள் இதனை கவனிக்காமல் இறங்கி குளித்ததால் பரிதாபமாக பலியானது தெரியவந்தது.

கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #Poompuharbeach
Tags:    

Similar News