செய்திகள்

பணியில் இருந்த பெண் காவலரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சில்மி‌ஷம்- சஸ்பெண்டு செய்து எஸ்.பி. நடவடிக்கை

Published On 2018-12-12 13:02 GMT   |   Update On 2018-12-12 13:02 GMT
திருச்சி போலீஸ் நிலையத்தில் இரவு பணியில் இருந்த பெண் காவலரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சில்மி‌ஷம் செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #womanpoliceharassment

திருச்சி:

திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக 32 வயதான பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் போலீசுக்கு இரவுப்பணி வழங்கப்பட்டிருந்தது. அங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பாலசுப்பிரமணியன்(வயது54) என்பவர் பணியாற்றி வருகிறார். அவருக்கும் இரவுப்பணி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நள்ளிரவு வேளையில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் நைசாக பேச்சுக்கொடுத்த பாலசுப்பிரமணியன், ஒரு கட்டத்தில் அவரை கட்டி அணைத்து சில்மி‌ஷத்தில் ஈடுபட தொடங்கினார். செய்வதறியாது திகைத்த அந்த பெண் போலீஸ் பின்னர் சுதாரித்துக்கொண்டு, தனது காலில் அணிந்திருந்த ‘ஷூ’-வை கழற்றி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் சில்மி‌ஷத்தால் வெட்கி தலைகுனிந்த அந்த பெண் போலீஸ் அழுதுகொண்டே இரவு வேளையில் பணி முடிந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், பெண் போலீசை கட்டி அணைத்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டிருந்தது பதிவாகி இருந்தது. அதை ஆதாரமாக கொண்டு அந்த பெண் போலீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் நேரில் சென்று புகார் அளித்தார்.

சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் சூப்பிரண்டு, பணியின்போது தவறாக நடக்க முயன்ற காரணத்தால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இந்த சம்பவம் திருச்சி மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #womanpoliceharassment

Tags:    

Similar News