செய்திகள்
தேனி அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை
சின்னமனூர் பகுதியில் டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று கடையை திறக்க பணியாளர்கள் வந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பக்கவாட்டு சுவரில் மிகப்பெரிய துளை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கடைக்குள் துளையிட்டு நுழைந்த கும்பல் 15 மதுபான பாட்டில்களை மட்டும் எடுத்து சென்றது தெரிய வந்தது. ஞாயிற்றுக்கிழமை விற்பனை அதிகமாக இருக்கும்.
அதனை மறுநாள் வங்கியில் கட்டுவதற்காக ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பணியாளர்கள் எடுத்து சென்று விட்டனர். இதனால் பணம் தப்பியது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.