மேகதாது அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அனைத்து கட்சியினர் முற்றுகை: வைகோ
மதுரை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து 2012-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
மேகதாது அணை கட்டினால் மேட்டூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு பகுதி வறண்டுவிடும். அணை கட்டுவதை தடுக்க தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக முற்றுகையிட வேண்டும்.
அப்படி செய்தால்தான் மத்திய அரசு அணை கட்டு வதை தடுக்கும். அணை கட்ட வெளிப்படையாக அனுமதி அளிக்க மாட்டோம் என கூறிய மத்திய அரசு, தற்போது ரகசியமாக ஒப்புதல் கொடுத்துள்ளது.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதுதான் சரியாக இருக்கும்.
மத்திய அரசு, மாநில அரசை காலில் போட்டு மிதித்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்து செயல்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ராசா கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Mekedatudam #Vaiko