செய்திகள்

தொடர்மழை எதிரொலி - மதுராந்தகம் ஏரிக்கு 2 நாளில் 13 அடி தண்ணீர் வந்தது

Published On 2018-11-23 13:32 IST   |   Update On 2018-11-23 13:32:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 13 அடி உயர்ந்து உள்ளது. #Maduranthakamlake
காஞ்சீபுரம்:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் பெய்த கனமழை காரணமாக 13 அடி உயர்ந்து உள்ளது.

ஏரியின் உயரம் 21.3 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர்மட்டம் 13 அடியாக பதிவாகி உள்ளது.

ஏரியின் முழு கொள்ளளவு 694 மில்லியன் கன அடி. தற்பொழுது 140 மில்லியன் கன அடி தண்ணீர் வந்து உள்ளது.

ஏரிக்கு கிளி ஆறு மற்றும் நெல்வாய் மதகு மூலம் 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏரியின் மொத்த பரப்பளவு 2411 ஏக்கர் ஆகும். கடந்த 2 நாளில் ஏரியின் நீர்மட்டம் 13 அடி எட்டி இருப்பது விவசாயிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் 2நாட்களாக பெய்துவந்த கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வெங்கம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையோர மின் கம்பம் சாய்ந்து விழுந்தது பெருமாள்சேரி தரைப்பாலத்தில் 3அடிக்கு மேல் வெள்ளம் சென்றதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வழியாக சென்ற வாகனங்களை கல்பாக்கம் அணுமின் நிலைய நகரியம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இதேபோல் புதுப்பட்டினம், பல்லவன்நகர், மோட்டுகொல்லை, பிரபலிமேடு, ஹாஜியாநகர், பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் உய்யாலிகுப்பம் கடற்கரையில் இருந்து 3கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முகத்துவாரத்தை பொக்லைன் வைத்து தோன்டி மழைநீர் கடக்குள் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் மழைநீர் வெளியேறி படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. #Maduranthakamlake

Tags:    

Similar News