செய்திகள்

பி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்

Published On 2018-11-11 05:27 GMT   |   Update On 2018-11-11 05:27 GMT
கோவையில் தொழில் அதிபரின் சொகுசு காரில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாக பாம்பை 1 மணி நேரம் போராடி வெளியில் எடுத்தனர். #Snake #Car
வெள்ளகோவில்:

திருப்பூரை சேர்ந்தவர் விக்னேஷ் ராஜா. பனியன் நிறுவன உரிமையாளர்.

சம்பவத்தன்று இரவு இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது சொகுசு காரில் சென்றார்.

முத்தூர் அருகே வரட்டுக்கரை என்ற இடத்தில் வரும்போது, பாம்பு ஒன்று காரின் முன்பக்க கண்ணாடியில் படம் எடுத்து ஆடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த போது பாம்பை காணவில்லை.

எனினும் கார் உரிமையாளருக்கு சந்தேகம் இருந்தது. இதையடுத்து கோவையில் உள்ள கார் நிறுவனத்துக்கு தகவல் கூறி நிறுவனத்தின் பணிமனைக்கு காரை கொண்டு சென்று பார்த்தபோது, காரின் என்ஜின் பகுதியில் 5 அடி நீள நாக பாம்பு சுருண்டு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பாம்பு பிடிக்கும் வீரரான சஞ்சய் அழைக்கப்பட்டார். அவர் காரில் சுருண்டு படுத்து இருந்த பாம்பை 1 மணி நேரம் போராடி லாவகமாக பிடித்து வெளியில் எடுத்தார். பின் அந்த பாம்பானது பத்திரமாக மதுக்கரை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

உயர் ரக சொகுசு காரில் 5 அடி நீள நாகப்பாம்பு பதுங்கி இருந்தது கார் உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #Snake #Car





Tags:    

Similar News