செய்திகள்
பலியான குழந்தை சிவான்யா

திருச்சி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி

Published On 2018-11-09 04:06 GMT   |   Update On 2018-11-09 04:06 GMT
திருச்சி அருகே 2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியநாச்சிபட்டியை சேர்ந்தவர் தமிழழகன் என்ற தினேஷ் (வயது 34), விவசாயி. இவரது மனைவி காயத்ரி (26). இவர்களுக்கு 2 வயதில் சிவான்யா என்ற மகள் இருந்தாள்.

இந்த குழந்தைக்கு கடந்த 28-ந்தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் காடு வெட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்னரும் மீண்டும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் காட்டுப்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 31-ந்தேதி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு குழந்தை சிவான்யாவிற்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். அங்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5-ந்தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று குழந்தை சிவான்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். பன்றிக்காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News