செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு வாலிபர் உயிரிழப்பு

Published On 2018-11-08 05:56 GMT   |   Update On 2018-11-08 05:56 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு வாலிபர் பலியானார். பன்றி காய்ச்சல் பாதிப்புடன் 6 குழந்தைகள் உள்பட 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu
மதுரை:

மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் காலனியைச் சேர்ந்தவர் அருண் (வயது32). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.

எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அருண் பரிதாபமாக இறந்தார்.

பன்றி காய்ச்சல் பாதிப்புடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் உள்பட 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 90 பேரும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 24 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu

Tags:    

Similar News