செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி-டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 4 பேர் பலி

Published On 2018-11-02 04:29 GMT   |   Update On 2018-11-02 04:29 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். #Swineflu #Dengue
கோவை:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.

அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி ஏராளமானோர் வருகின்றனர். இதனால் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பன்றி, டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என டாக்டர்கள் சோதனை செய்து அங்கு திறக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவை வெள்ளலூரை சேர்ந்த நாகராஜ் (வயது 62). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் நாகராஜின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று இரவு நாகராஜை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமால் இன்று அதிகாலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதே போல சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த நாகமணி (45). இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு திடீரென நாகமணியின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவரை உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வந்த 1 மணிநேரத்தில் நாகமணி பரிதாபமாக இறந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆர். வேலூரை சேர்ந்தவர் நாகராஜ் (55). இவரும் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக நேற்று முன்தினம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவரை டாக்டர்கள் அங்குள்ள காய்ச்சல் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு நாகமணி பரிதாபமாக இறந்தார்.

தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் மாருதி நகரை சேர்ந்தவர் கார்த்திக். பனியன் தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு சன்சியா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. இக்குழந்தைக்கு கடந்த மாதம் 18 -ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குணமாகாததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறுமியை பரிசோதித்தபோது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி பலனின்றி இறந்தார். இதனால் கொண்டரசம்பாளையம் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

பலியான சன்சியாவின் பெற்றோருக்கு பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி அவர்களையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 12 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 3 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 56 பேர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu #Dengue
Tags:    

Similar News