செய்திகள்

பிறந்த குழந்தையை தண்ணீர் வாளியில் அமுக்கி கொன்ற தாய் கைது

Published On 2018-10-19 09:39 GMT   |   Update On 2018-10-19 09:39 GMT
வேளச்சேரி அருகே பிறந்த குழந்தையை தண்ணீர் வாளியில் அழுக்கி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாய், காதலனும் கைதானார்கள்.
ஆலந்தூர்:

வேளச்சேரி கன்னிகாபுரத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே குப்பைத் தொட்டியில் கடந்த 17-ந் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்தது.

இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தையை கொன்று வீசியது வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்த தாய் வசந்தி என்பது தெரிந்தது.

அவருக்கு உடந்தையாக தாய் விஜயா, போரூரை சேர்ந்த காதலன் ஜெபராஜ் இருந்தது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

குழந்தையை கொன்றது குறித்து வசந்தி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது எனக்கும் ஜெபராஜூக்கும் காதல் ஏற்பட்டது. நெருங்கி பழகியதால் நான் கர்ப்பம் அடைந்தேன். இதனை வீட்டுக்கு தெரியாமல் மறைத்தேன். 7 மாதத்துக்கு பின்னர் நான் கர்ப்பமாக இருப்பது வீட்டுக்கு தெரிந்தது.

இதனை தாய் விஜயா கண்டித்தார். மேலும் திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றால் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் என்று கூறி இதனை வெளியில் தெரியாமல் மறைக்க முடிவு செய்தார்.

இதையடுத்து என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கடந்த மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்தால் உறவினர்கள் கிண்டல் செய்வார்கள் என்று நாங்கள் நினைத்தோம்.

எனவே குழந்தையை கொன்று குப்பைத் தொட்டியில் வீச முடிவு செய்தோம். இதுபற்றி காதலன் ஜெபராஜுக்கு தெரிவித்தோம். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கடந்த 16-ந்தேதி குழந்தையை தண்ணீர் வாளிக்குள் அமுக்கி கொன்றோம். பின்னர் குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் வீசினோம். போலீசாரிடம் சிக்கமாட்டோம் என்று நினைத்தோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News