மன்னார்குடியில் அ.தி.மு.க. பிரமுகர் வீடு- நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் பகுதியை சேர்ந்தவர் டி.எம்.ஏ. மனோகரன்.
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் சேரன்குளம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இவர் முதல் நிலை ஒப்பந்த தாரராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்கள் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் வருமான வரித்துறையினர் மன்னார்குடிக்கு வந்தனர்.
அங்கு மனோகரனுக்கு சொந்தமான டி.எம். டவர் என்ற பெயரில் உள்ள லாட்ஜ் மற்றும் அவரது அலுவலகம், பெட்ரோல் பங்க், தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூரில் உள்ள திருமண மண்டபம், நீடா மங்கலத்தில் உள்ள தார் பிளாண்ட் குவாரி உள்பட 6 இடங்களில் இன்று சோதனை நடந்தது.
சுமார் 30 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியே கார்களில் சென்று இந்த அதிரடி சோதனையை நடத்தினர்.
மன்னார்குடியில் உள்ள வீட்டில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். இதில் அங்கு இருந்த வரவு- செலவு கணக்குகள், மற்றும் முக்கிய ஆவணங்களை சரிபார்த்து ஆய்வு செய்தனர்.
வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இவர் அமைச்சர் காமராஜின் உறவினர் என்று கூறப்படுகிறது. #ITRaid #ADMK