செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம்: ஜாக்டோ ஜியோ

Published On 2018-10-13 10:15 GMT   |   Update On 2018-10-13 10:15 GMT
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 27-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. #JactoJio
சேலம்:

சேலம் ஜவகர்மில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் இன்று பிற்பகல் ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

1-3-2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு கால முறை தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத கால ஊதிய குழுவில் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடுவதை முழுமையாக கைவிட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அரசு பணிகள் பாதிக்கும். அரசு பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும்.

இதுவரை இருந்த எல்லா முதல்-அமைச்சர்களும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அழைத்து பேசுவார்கள். ஆனால் தற்போதுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி 5-ம் வகுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு 82 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக கூறி வருகிறார்கள். குடிகாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதாக அநாகரீகமாக பேசி வருகிறார்.

இதனால் இதை கண்டிக்கும் வகையில் சேலத்தில் அவரது வீட்டின் அருகே இந்த மாநாடு நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #JactoJio
Tags:    

Similar News