செய்திகள்

கனமழை எதிரொலி: வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம்

Published On 2018-10-05 10:02 GMT   |   Update On 2018-10-05 10:02 GMT
மழை காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

வீராணம் ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கல்லணையில் இருந்த கடந்த 30-ந் தேதி கீழணைக்கு முறைப்பாசன தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை யடுத்து அன்று வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. சென்னை குடிநீருக்காவும் நீர் அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி ஏரியில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

மழை காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. ஏரிக்கு 548 கனஅடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. #VeeranamLake

Tags:    

Similar News