செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-09-29 07:05 GMT   |   Update On 2018-09-29 07:05 GMT
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உணவு குழாயில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #ThirumuruganGandhi
வேலூர்:

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி வயிற்று போக்கு, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இதில் திருமுருகன் காந்திக்கு உணவு குழாயில் பிரச்சனை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

இதற்காக வேலூர் ஜெயிலில் இருந்து இன்று காலை திருமுருகன் காந்தியை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக வார்டில் அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திருமுருகன் காந்திக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.  #ThirumuruganGandhi

Tags:    

Similar News