செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே பஸ் மீது கார் மோதல் - 2 பேர் பலி

Published On 2018-09-21 06:24 GMT   |   Update On 2018-09-21 06:24 GMT
கூடுவாஞ்சேரி அருகே பஸ் மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #CarAccident
செங்கல்பட்டு:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 62), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி செல்வி (52).

இவர்கள் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி வேலை பார்த்து வரும் மகனை பார்க்க காரில் வந்தனர். உடன் செல்வியின் தங்கை சித்ரா (43), அவரது மகள் தாரணி (17) ஆகியோரும் வந்தனர். காரை டிரைவர் ஜெயகாந்தன் ஓட்டினார்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது தாம்பரத்தில் இருந்து குமிழி நோக்கி சென்ற அரசு பஸ் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்துக்குள் செல்ல திரும்பியது.

அந்த நேரத்தில் வேகமாக வந்த கார் திடீரென பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நசுங்கியது.

காரில் இருந்த பாலகிருஷ்ணன், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். செல்வி, தாரணி, டிரைவர் ஜெயகாந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் செல்வியின் நிலைமை மோசமாக உள்ளது.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #CarAccident

Tags:    

Similar News