செய்திகள்

ஆத்தூர் அருகே மழையால் தண்டவாளத்தில் மண் அரிப்பு- சேலம் ரெயில் தப்பியது

Published On 2018-09-14 11:23 GMT   |   Update On 2018-09-14 11:23 GMT
ஆத்தூர் அருகே இன்று காலை பலத்த மழை பெய்ததில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சேலம் ரெயில் வந்ததால் பொதுமக்கள் துணியை காட்டி நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் ஆத்தூர் அருகே உள்ள அம்மம் பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் மண் அரிப்பு காரணமாக தொங்கி கொண்டிருந்தது. அந்த சமயம் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி, பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரெயில் என்ஜீன் டிரைவரை பார்த்து சிகப்பு துணியை காட்டி ரெயிலை நிறுத்துமாறு கூறினார்கள். உடனே டிரைவரும் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

இதையடுத்து, தண்டவாளத்தில் மண் அரிப்பு குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்தி ரம் மூலம் சீரமைப்பு பணி நடந்தது.

பின்னர், சேலம்- விருத் தாச்சலம் ரெயில் அங்கிருந்து 8.05 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக இந்த ரெயில் தினமும் காலை 9 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும். ஆனால், இன்று ½ மணி நேரம் தாமதமாக ரெயில் சேலம் வந்து சேர்ந்தது.

இதனால் ரெயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகள், வேலைக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

தக்க சமயத்தில் பொதுமக்கள் சிகப்பு துணியை காட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

Tags:    

Similar News