செய்திகள்

மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் தொழிலாளியை அடித்துக்கொன்ற தாய்- தம்பி உள்பட 3 பேர் கைது

Published On 2018-09-11 10:46 GMT   |   Update On 2018-09-11 10:46 GMT
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் அருகே மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் தொழிலாளியை அடித்துக்கொன்ற தாய் மற்றும் தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே உள்ள தச்சன்விளை பள்ளம்தட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 63). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (58). இவர்களுக்கு 6 மகள்கள், 2 மகன்கள்.

இதில் மூத்த மகன் முத்துகுமார் (34). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. மேலும் அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் முத்துகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல், தினமும் மதுகுடித்து விட்டு, தன்னுடைய குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில்சம்பவத்தன்று முத்துகுமார் மதுகுடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று, குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துகுமார் தன்னுடைய தாயார் கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி, அவரது கையில் கடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணவேணி அலறி துடித்தார்.

உடனே அங்கு ஓடி வந்த இளைய மகன் சுயம்புலிங்கம் (24), மருமகன் மாரியப்பன் (35) மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்துகுமாரை கையாலும், கம்பாலும் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த முத்துகுமார் மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், விசாரணை நடத்தினார். முத்துக்குமாரை தாக்கிய அவரது தாய் கிருஷ்ணவேணி, தம்பி சுயம்புலிங்கம், அத்தான் மாரியப்பன் ஆகிய 3 பேர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணவேணி, சுயம்புலிங்கம், மாரியப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று முத்துகுமார் மதுகுடித்து விட்டு கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி தாக்கினார்.

இதையடுத்து சுயம்புலிங்கம், மாரியப்பன், கிருஷ்ணவேணி ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்துகுமாரை கம்பால் தாக்கியதில் மயங்கினார். பின்னர் சிகிச்சை பலனில்லாமல் இறந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News