செய்திகள்
ரெயில் மோதி கவிழ்ந்து கிடக்கும் ஜே.சி.பி. வாகனம்.

ஆள்இல்லா கேட்டை கடந்த போது விபத்து- ஜே.சி.பி. வாகனம் மீது மோதிய ரெயில்

Published On 2018-09-10 10:06 GMT   |   Update On 2018-09-10 10:06 GMT
திண்டுக்கல் அருகே ஆள் இல்லா கேட்டை கடந்த ஜே.சி.பி. வாகனம் மீது ரெயில் மோதியது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சத்திரப்பட்டி:

திருவனந்தபுரத்தில் இருந்து பழனி வழியாக அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் இன்று காலை திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி மாட்டுப்பாதை என்ற இடத்தில் வந்தது. இந்த இடத்தில் ஆள் இல்லா கேட் உள்ளது. இதனை ஜே.சி.பி. வாகனம் கடக்க முயன்றது. சத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஹரீஸ் அந்த வாகனத்தை ஓட்டினார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த ராஜ் என்பவரும் வந்தார்.

இவர்கள் காதுகளில் ஹெட்செட் அணிந்து பாட்டு கேட்டபடி வந்தனர். இதனால் ரெயில்வரும் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஜே.சி.பி. வாகனம் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஜே.சி.பி. வாகனம் அருகில் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதனை ஓட்டிவந்த ஹரீஸ், ராஜ் ஆகிய 2 பேரும் ஜே.சி.பி. வாகனத்தில் சிக்கி அலறினர்.

சத்தம் கேட்டு உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்தனர். அவர்கள் விபத்தில்சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 10 நிமிடம் தாமதத்துக்கு பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News