செய்திகள்

டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

Published On 2018-08-24 12:14 IST   |   Update On 2018-08-24 12:14:00 IST
அண்ணாசாலை வழித்தடத்தில் டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் இன்று காலை நடந்தது. #ChennaiMetroTrain
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்டப் பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் தற்போது பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

பயணிகள், பொது மக்கள் வரவேற்பை தொடர்ந்து மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

அண்ணாசாலை வழித்தடத்தில் டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி இன்று டி.எம்.எஸ். - வண்ணாரரப்பேட்டை வரை 15 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.

மெட்ரோ ரெயில் அதிகாரிகள், என்ஜினீயர் குழுவினர் தலைமையில் இன்று முதன் முறையாக சோதனை ஓட்டம் நடந்தது. சுரங்க மெட்ரோ ரெயில் தண்டவாள பாதையில் மெட்ரோ ரெயில் என்ஜின் வெற்றிகரமாக ஓடியது.

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் மெட்ரோ ரெயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடக்கிறது.

டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் வருகிற டிசம்பர் மாதம் முதல் பயணிகள் சேவை நடைபெற உள்ளது. இனிமேல் மெட்ரோ ரெயில் பயணிகள் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக நேரடியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயிலில் எளிதில் செல்லலாம்.

அண்ணாசாலை வழித்தடத்தில் தற்போது டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், ஐகோர்ட்டு, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்கள் நவீன வடிவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. #ChennaiMetroTrain
Tags:    

Similar News