செய்திகள்

சிவகாசி அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

Published On 2018-08-24 10:21 IST   |   Update On 2018-08-24 10:21:00 IST
அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #bombrange

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது38). அ.தி.மு.க. பிரமுகரான இவர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். கட்சி பணிகளிலும் தீவிர ஆர்வம் காட்டிவரும் இவர் வெம்பக் கோட்டை பஸ் நிலையம் அருகில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.

இரவு 10.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜ பாண்டி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பினர்.

வெடிகுண்டு சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜபாண்டி வெடிகுண்டு வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் நாட்டு வெடிகுண்டு சிதறல்களை சேகரித்தனர். வெடிகுண்டு வீச்சுக்கு அரசியல் முன்விரோதம் காரணமா? அல்லது தொழில் போட்டியால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்நத 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News