செய்திகள்

சென்ட்ரலில் பறக்கும் ரெயில்-மெட்ரோ ரெயில் இணைப்பு சுரங்கப்பாதை

Published On 2018-07-14 08:04 GMT   |   Update On 2018-07-14 08:04 GMT
பயணிகள் வசதிக்காக சென்ட்ரலில் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் இணைப்பு சுரங்கப்பாதை 3 மாதங்களில் திறக்கப்படுகிறது. #Metrotrain
சென்னை:

சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் பயணிகள் விரைவு போக்குவரத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

சென்ட்ரலில் பிரம்மாண்ட மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு சென்ட்ரலில் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள், மூர்மார்க்கெட் புறநகர் ரெயில் பயணிகள், பூங்கா நகர் பறக்கும் ரெயில் பயணிகள், மெட்ரோ ரெயில் பயணிகள் ஆகியோர் எளிதில் செல்லும் வகையில் அதிநவீன இணைப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

45 மீட்டர் நீளம் 11 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை இன்னும் 3 மாதங்களில் பயணிகள் வசதிக்காக திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் ஒரே நேரத்தில் மெட்ரோ ரெயில் நிலையம், மின்சார ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையம், எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு எளிதில் செல்ல முடியும்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில், மின்சார ரெயில், எக்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில் பூமிக்கடியில் பிரம்மாண்ட சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இன்னும் 3 மாதங்களில் பயணிகள் வசதிக்காக இந்த சுரங்கப் பாதை திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
Tags:    

Similar News