மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயிலுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.
பொது மக்கள், பயணிகள் இடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப் படுத்தப்பட்டு வருகிறது.
2-வது கட்டமாக ரூ. 85,047 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் மாதவரம்- சிறுசேரி இடையே அமைக்கப்பட உள்ளது. 107.55 கிலோ மீட்டர் தூர வழித்தடங்களுடன் இந்த பணிகள் நடைபெற உள்ளது.
இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. மாதவரம், செம்பியம், பெரம்பூர், ஓட்டேரி பகுதிகளில் மெட்ரோ வழித்தடங்களில் உள்ள வீடுகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலுக்காக இடங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு, கடை உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாதவரம் - சிறுசேரி மெட்ரோ திட்ட பணிகள் அடுத்த ஆண்டு (2019) முதல் தொடங்கப்படுகிறது. இந்த திட்டப் பணிகள் மாதவரம், பெரம்பூர், ஓட்டேரி, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, அடையார், திருவான்மியூர், ஓ.எம்.ஆர்., சிறுசேரி வழித்தட பாதை வழியாகவும், மாதவரம் - கொளத்தூர், வில்லிவாக்கம், வளசரவாக்கம், ஆதம்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்க நல்லூர் பாதை வழியாகவும் அமைக்கப்படுகிறது.
80 சதவீத பணிகள் சுரங்கப்பாதை வழியாக அமைக்கப்பட உள்ளது. சுரங்கப்பாதை, ரெயில் நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய தொகை வழங்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain