செய்திகள்

ஒரத்தநாடு அருகே நடந்து சென்ற மனைவியிடம் 7 பவுன் நகை பறித்த கணவர்

Published On 2018-06-20 10:56 GMT   |   Update On 2018-06-20 10:56 GMT
ஒரத்தநாடு அருகே கடைவீதியில் நடந்து சென்ற மனைவியிடம் 7 பவுன் நகையை கணவர் பறித்து சென்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவராபட்டு பகுதியை சேர்ந்தவர் சிவாமணி (வயது 35). இவருக்கும் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூர் பகுதியை சேர்ந்த ரெங்கசாமி. மகள் சுதாவுக்கும் (28) இடையே கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சிவாமணி சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் சுதா, கணவரிடம் கோபித்து கொண்டு தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஒரத்தநாடு கடைவீதியில் சுதா நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சிவாமணி வந்தார்.கணவரை பார்த்து சுதா அதிர்ச்சி அடைந்தார். அப்போது சிவாமணி திடீரென, மனைவி சுதா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

தனது நகையை கணவரே திருடன் போல் பறித்து கொண்டு ஓடியதை கண்டு சுதா வேதனை அடைந்தார். ‘திருடன்.. திருடன்..’ என்று சத்தம் போட கூட முடியாமல் திடுக்கிட்டு போய் நின்றார்.

மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் நகை பறிப்பு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நகை பறிப்பு சம்பவம் பற்றி பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News