செய்திகள்

மேட்டூர் அணை குறித்து பேசிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைக்கண்ணு பதிலடி

Published On 2018-06-20 10:37 GMT   |   Update On 2018-06-20 10:37 GMT
மேட்டூர் அணையை உடனே திறக்க அது என்ன வீட்டு குடிநீர் குழாவா? என மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைக்கண்ணு பதில்அளித்துள்ளார்.
கும்பகோணம்:

அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி பொதுக்கூட்டம் கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் பகுதியில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காவிரி பிரச்சனையில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். குடிநீர் தன் உயிர்நிலை என்று கருதி வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீரை கொண்டு வந்தவர்.

தற்போது ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் காவிரி பிரச்சனையில் பல கண்டன பொதுக் கூட்டங்கள், போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு ரூ.115 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார்.

ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். மேட்டூர் அணையில் 39 அடி தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு அணையை திறக்க முடியாது. ஏனென்றால் 39 அடி தண்ணீரில் 10 அடி சேறு இருக்கும். மீதியுள்ள 29 அடி தண்ணீரை எப்படி விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும். இந்த உண்மை தி.மு.க.வினருக்கு நன்றாக தெரியும்.

கோவணம் கட்டுபவனுக்கு தெரிந்த வி‌ஷயம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. தண்ணீர் கொடு.. தண்ணீர் கொடு என்று கேட்கிறார். தண்ணீர் என்ன எனது பாக்கெட்டிலா உள்ளது. அல்லது எனது வீட்டு குழாயில் இருந்து எடுத்து கொடுப்பதா?

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ஜெயலலிதாவை விட அதிக நலத்திட்டங்களை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிசாமி தான்.

இவ்வாறு அமைச்சர் துரைக்கண்ணு பேசினார். #MetturDam #TNMinister #DuraiKannu
Tags:    

Similar News