சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறான சட்டத்துக்கு முன் உதாரணம்: ஜான்பாண்டியன் கருத்து
கோவில்பட்டி:
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேவேந்திரர் குல வேளாளர் சங்கம் சார்பில் ஜூலை 15-ல் தஞ்சாவூரில் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பான பிரசாரத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கோவில்பட்டிக்கு வந்தார். அவர் சங்கரலிங்கபுரம், அரசு போக்குவரத்து கழகம் முன், புளியம்பட்டி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அகில இந்திய தேவேந்திரர் குல வேளாளர் சங்கம் சார்பில் அடுத்த மாதம் 15-ம் தேதி தஞ்சாவூரில் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக நெல்லை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பிரசார சுற்றுப்பயணம் முடித்துள்ளேன். தற்போது தூத்துக்குடி, தேனி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்கிறேன். தேவேந்திரர் குல வேளாளர்களுடைய பல உட்பிரிவுகளை உள்ளடக்கி, தேவேந்திரர் குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என முன்னிறுத்தி மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
18 சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் வழக்கில் சரியான தீர்ப்பு அல்ல. இது தவறான சட்டத்துக்கு முன் உதாரணமாகும். சட்டத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என்பது தான் எங்கள் கருத்து. தலைமை நீதிபதியும், நீதிபதியும் சேர்ந்து வெவ்வேறு கருத்துகளை பரிமாற்றம் செய்து, அது 3-வது பெஞ்சுக்கு போனால், மக்களை திசை திருப்புவதற்காக முடிவு செய்யா முடியாத நிலையில் சட்டம் இருக்கும் என்றால், மக்கள் எப்படி நீதிமன்றத்தை நாடுவது என்பது எங்கள் கேள்வி. நீட் என்பது இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. நீட் தேர்வுக்காக உயிரை மாய்த்து கொள்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #johnpandian #18mlas #chennaihighcourt