'முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பதுதான் நெருடுகிறது' - ப.சிதம்பரம்!
- உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,94,672 மற்றும் இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278 என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மெய்யான நபர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம்". எனக் குறிப்பிட்டுள்ளார்.