கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்க கூடாது- மதுரை ஐகோர்ட் உத்தரவு
- வனச்சரகர் வெளியிட்ட தடை உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.
- அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மதுரை:
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கே.குணசீலன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி மலை வடக்கு கிராமத்தில் 93 ஏக்கர் பட்டா நிலம் வைத்துள்ளேன். இதில் 53 ஏக்கரில் 'நிலம் வைத்து' இயற்கை விவசாயப் பண்ணை அமைத்து, தென்னை, அவகேடோ மற்றும் ஜாதிக்காய் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறேன்.
இந்நிலையில் நிலச்சரிவைத் தடுக்கவும், மழைநீரைச் சேமிக்கவும் தனது பட்டா நிலத்திலேயே அணை கட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் பொறியியல் துறையிடம் உரிய அனுமதி பெற்று, சுமார் 2 கோடி ரூபாய் செலவில் பணிகளை முடித்தேன். கடந்த டிசம்பர் மாதம் பண்ணைக்கு ஒரு முக்கிய நபர் வந்து சென்ற பிறகு, கன்னிவாடி வனச்சரகர் மற்றும் வனவர் ஆகியோரின் அணுகுமுறை மாறியது. அவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், விவசாயப் பணிகளைத் தடுக்கப் போவதாக மிரட்டினர்.
எந்திரங்களைப் பயன்படுத்துவதால் யானைகள் ஊருக்குள் வருவதாக வனத்துறையினர் கூறுவது முற்றிலும் பொய், அந்தப் பகுதியில் யானைகளே இல்லை. மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்த பிறகும், வனச்சரகர் பணிகளை நிறுத்தச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதமானது.
எனவே வனச்சரகர் வெளியிட்ட தடை உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், வனப்பகுதி வழியாகச் செல்லும் பாதையைப் பயன்படுத்தவும் வனத்துறையினர் இடையூறு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கில் மனுதாரருக்கும் வனத்துறைக்கும் இடையே தகராறு உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும், ஏற்கனவே கட்டப்பட்ட அணையை எக்காரணம் கொண்டும் இடிக்கக்கூடாது. ஒருவேளை வனத்துறை அந்த அணையைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்தாலும், அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏனெனில், அந்த அணை வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கப் பயனுள்ளதாக இருக்கும்.
வனச்சரகர் பிறப்பித்த நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அணை ஏதேனும் இடிக்கப்பட்டிருந்தால், அதனை உடனடியாக வனத்துறையே மீண்டும் கட்டித்தர வேண்டும். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.