மதுரை அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் சரத்குமார் ஊரில் நல்லது கெட்டது விஷயங்களில் கலந்து கொண்டு பெரிய மனிதராக வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் தாய் தந்தையை இழந்த சிறுவன் சண்முக பாண்டியன், சரத்குமாரை ஒரு சிறிய சண்டையில் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சரத்குமார் உடனே பயணிக்கிறார் சண்முக பாண்டியன்.
இருவரும் ஊரில் கஞ்சா கடத்தி விற்று சம்பாதித்து வருகிறார்கள். போலீஸ்காரர்களின் சூழ்ச்சியால் சண்முக பாண்டியன் கஞ்சாவுடன் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறார். இதனால் கோபமடையும் சரத்குமார் போலீஸ் நிலையத்தை எரித்து சண்முக பாண்டியனே வெளியில் கொண்டு வந்து விடுகிறார்.
இறுதியில் போலீஸ் இவர்களை பிடித்தார்களா? சரத்குமார், சண்முக பாண்டியன் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சரத்குமார். ஊருக்காக போராடுவது, சண்முக பாண்டியன் மீது பாசம், அவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி மற்றும் வெகுளித்தனமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், காதல், ஆக்ஷன், நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தரணிகா போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
இயக்கம்
வைகை அணை கட்டும் போது பல கிராமங்கள் செழிப்பானாலும், சில கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பொன்ராம். ஆனால், வைகை அணை பற்றி அதிகம் பேசாமல், கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தும் வைத்து எடுத்து இயக்கி இருக்கிறார்.
விவசாயம் பற்றி சில வசனங்கள் மூலம் மேலோட்டமாக சொல்லி இருக்கிறார். முதல் பாதி திரைக்கதை சுமாராகவும், இரண்டாம் பாதி திரைக்கதை விறுவிறுப்பாகவும் நகர்த்தி இருக்கிறார். காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.
இசை
யுவன் சங்கர் ராஜா இசையில் 2 பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறார்.
ஔிப்பதிவு
பால சப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.
ரேட்டிங்- 2/5